பாரதிதாசன்
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார்மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
பொருளடக்கம்
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.
மறைவு[தொகு]
பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார்.
பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்[தொகு]
"எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே"
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
பாரதிதாசனின் ஆக்கங்கள்[தொகு]
பாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். அவற்றுள் சில:
- அம்மைச்சி (நாடகம்) [1]
- உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
- உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)
- எது பழிப்பு, குயில் (1948)
- கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
- கழைக்கூத்தியின் காதல் (நாடகம்) [1]
- கலை மன்றம் (1955)
- கற்புக் காப்பியம், குயில் (1960)
- சத்திமுத்தப் புலவர் (நாடகம்) [1]
- நீலவண்ணன் புறப்பாடு
- பிசிராந்தையார், (நாடகம்) பாரி நிலையம் (1967) [1]
- பெண்கள் விடுதலை
- விடுதலை வேட்கை
- வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
- ரஸ்புடீன் (நாடகம்) [1]
இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
பாரதிதாசன் நூல்கள்[தொகு]
பாரதிதாசன் படைப்புகள் பல அவர் வாழ்ந்தபொழுதும் அவரின் மறைவிற்குப் பின்னரும் நூல்வடிவம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்:
வ.எண் | நூலின் பெயர் | முதற்பதிப்பு ஆண்டு | வகை | பதிப்பகம் | குறிப்பு |
---|---|---|---|---|---|
01 | அகத்தியன்விட்ட புதுக்கரடி | 1948 | காவியம் | பாரதிதாசன் பதிப்பகம், புதுவை | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
02 | சத்திமுத்தப்புலவர் | 1950 | நாடகம் | பாரதிதாசன் பதிப்பகம், புதுவை | |
03 | இன்பக்கடல் | 1950 | நாடகம் | பாரதிதாசன் பதிப்பகம், புதுவை | |
04 | அமிழ்து எது? | 1951 | கவிதை | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. | |
05 | அமைதி | 1946 | நாடகம் | செந்தமிழ் நிலையம், இராமச்சந்திராபுரம் | |
06 | அழகின் சிரிப்பு | 1944 | கவிதை | முல்லை பதிப்பகம், சென்னை | |
07 | இசையமுது (முதலாம் தொகுதி) | 1942 | இசைப்பாடல் | பாரத சக்தி நிலையம், புதுவை | |
08 | இசையமுது (இரண்டாம் தொகுதி) | 1952 | இசைப்பாடல் | பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி | |
09 | இந்தி எதிர்ப்புப் பாடல்கள் | 1948 | இசைப்பாடல் | ||
10 | இரணியன் அல்லது இணையற்ற வீரன் | 1939 | நாடகம் | குடியரசுப் பதிப்பகம் | 1934 – செப்டம்பர் 5ஆம் நாள் பெரியார் தலைமையில் அரங்கேற்றப்பட்டது. |
11 | இருண்டவீடு | 1944 | காவியம் | முத்தமிழ் நிலையம், கோனாபட்டு, புதுக்கோட்டை | |
12 | இலக்கியக் கோலங்கள் | 1994 | குறிப்புகள் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை | ச. சு. இளங்கோ பதிப்பு |
13 | இளைஞர் இலக்கியம் | 1958 | கவிதை | ||
14 | உலகம் உன் உயிர் | 1994 | கவிதை | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை | வெவ்வேறு இதழ்களில் எழுதிய தலையங்கக் கவிதைகள். ச. சு. இளங்கோ பதிப்பு |
15 | உலகுக்கோர் ஐந்தொழுக்கம் | 1994 | கட்டுரைகள் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை | ச.சு.இளங்கோ பதிப்பு. தலையங்கக் கட்டுரைகள் |
16 | எதிர்பாராத முத்தம் | 1938 | கவிதை | - | |
17 | எது இசை? | 1945 | சொற்பொழிவும் பாடல்களும் | கமலா பிரசுராலயம், 59 பிராட்வே, சென்னை | பாரதிதாசனும் பாடல்களும் அண்ணாதுரையின் கட்டுரையும் சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், சர் மு. அண்ணாமலை செட்டியார், ராஜாகோபாலாச்சாரியார் ஆகியோரின் கருத்துகளும் அடங்கிய தொகுப்பு[2] |
18 | ஏழைகள் சிரிக்கிறார்கள் | 1980 | சிறுகதைகள் | பூம்புகார் பிரசுரம், சென்னை | ச. சு. இளங்கோ பதிப்பு. |
19 | ஏற்றப் பாட்டு | 1949 | இசைப்பாடல் | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. | |
20 | ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது | 1978 | இசைப்பாடல் | பூம்புகார் பிரசுரம், சென்னை | த.கோவேந்தன் பதிப்பு |
21 | கடற்மேற் குமிழிகள் | 1948 | காவியம் | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. | |
22 | கண்ணகி புரட்சிக் காப்பியம் | 1962 | காவியம் | அன்பு நிலையம், சென்னை | |
23 | கதர் இராட்டினப்பாட்டு, | 1930 | இசைப்பாடல் | காசி ஈ லஷ்மண் பிரசாத், ஶ்ரீவேல் நிலையம், புதுச்சேரி | |
24 | கவிஞர் பேசுகிறார் | 1947 | சொற்பொழிவு | திருச்சி | அன்பு ஆறுமுகம் என்பவரால் தொகுக்கப்பட்டது |
25 | கழைக்கூத்தியின் காதல் | 1951 | நாடகம் | ||
26 | கற்கண்டு | 1945 | நாடகம் | பாரதிதாசன் நாடகங்கள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது | |
27 | காதலா? கடமையா? | 1948 | காவியம் | பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி | |
28 | காதல் நினைவுகள் | 1944 | கவிதை | செந்தமிழ் நிலையம், இராமச்சந்திரபுரம் | |
29 | காதல் பாடல்கள் | 1977 | கவிதை | பூம்புகார் பிரசுரம், சென்னை | த.கோவேந்தன் பதிப்பு |
30 | குடும்பவிளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி | 1942 | காவியம் | பாரத சக்தி நிலையம், புதுவை | |
31 | குடும்ப விளக்கு - 2ஆம் பகுதி: விருந்தோம்பல் | 1944 | காவியம் | முல்லைப் பதிப்பகம், சென்னை | |
32 | குடும்ப விளக்கு - 3ஆம் பகுதி: திருமணம் | 1948 | காவியம் | முல்லைப் பதிப்பகம், சென்னை | |
33 | குடும்ப விளக்கு - 4ஆம் பகுதி: மக்கட்பேறு | 1950 | காவியம் | முல்லைப் பதிப்பகம், சென்னை | |
34 | குடும்ப விளக்கு - 5ஆம் பகுதி: முதியோர் காதல் | 1950 | காவியம் | முல்லைப் பதிப்பகம், சென்னை | ஐந்துபகுதிகளும் இணைந்த பதிப்பு பின்னாளில் வந்தது. |
35 | குமரகுருபரர் | 1992 | நாடகம் | காவ்யா, பெங்களூர் | 1944ஆம் ஆண்டில் இந்நாடகம் 1992ஆம் ஆண்டில் தமிழ்நாடனால் பதிப்பிக்கப்பட்டது |
36 | குயில் பாடல்கள் | 1977 | கவிதை | பூம்புகார் பிரசுரம், சென்னை | த.கோவேந்தன் பதிப்பு |
37 | குறிஞ்சித்திட்டு | 1959 | காவியம் | பாரி நிலையம், சென்னை | |
38 | கேட்டலும் கிளத்தலும் | 1981 | கேள்வி-பதில் | பூம்புகார் பிரசுரம், சென்னை | ச. சு. இளங்கோ பதிப்பு |
39 | கோயில் இருகோணங்கள் | 1980 | நாடகம் | பூம்புகார் பிரசுரம், சென்னை | ச. சு. இளங்கோ பதிப்பு |
40 | சஞ்சீவி பர்வதத்தின் சாரல் | 1930 | காவியம் | ம. நோயேல் வெளியீடு, புதுவை | பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
41 | சிரிக்கும் சிந்தனைகள் | 1981 | துணுக்குகள் | பூம்புகார் பிரசுரம், சென்னை | ச. சு. இளங்கோ பதிப்பு |
42 | சிறுவர் சிறுமியர் தேசியகீதம் | 1930 | கவிதை | ||
43 | சுயமரியாதைச் சுடர் | 1931 | பாட்டு | கிண்டற்காரன் என்னும் புனைப்பெயரில் எழுதிய 10 பாடல்களைக் கொண்டது. குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படையல் | |
44 | செளமியன் | 1947 | நாடகம் | ||
45 | சேரதாண்டவம் | 1949 | நாடகம் | பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி | |
46 | தமிழச்சியின் கத்தி | 1949 | காவியம் | பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி | |
47 | தமிழியக்கம் | 1945 | கவிதை | செந்தமிழ் நிலையம், ராயவரம் | ஒரே இரவில் எழுதியது |
48 | தமிழுக்கு அமிழ்தென்று பேர் | 1978 | கவிதை | பூம்புகார் பிரசுரம், சென்னை | த.கோவேந்தன் பதிப்பு |
49 | தலைமலை கண்ட தேவர் | 1978 | நாடகம் | பூம்புகார் பிரசுரம், சென்னை | ச. சு. இளங்கோ பதிப்பு |
50 | தாயின் மேல் ஆணை | 1958 | கவிதை | ||
51 | தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு | 1930 | பாட்டு | ம. நோயேல் வெளியீடு, புதுவை | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
52 | திராவிடர் திருப்பாடல் | 1948 | கவிதை | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. | |
53 | திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் | 1949 | கவிதை | பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. | |
54 | தேனருவி | 1956 | இசைப்பாடல் | பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி | 1978ஆம் ஆண்டில் சென்னை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட த. கோவேந்தன் பதிப்பில் புதிய பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. |
55 | தொண்டர் வழிநடைப் பாட்டு | 1930 | பாட்டு | ||
56 | நல்லதீர்ப்பு | 1944 | நாடகம் | முல்லைப் பதிப்பகம், சென்னை | |
57 | நாள் மலர்கள் | 1978 | கவிதை | பூம்புகார் பிரசுரம், சென்னை | த.கோவேந்தன் பதிப்பு |
58 | படித்த பெண்கள் | 1948 | நாடகம் | ||
59 | பன்மணித்திரள் | 1964 | கவிதை | ||
60 | பாட்டுக்கு இலக்கணம் | 1980 | இலக்கணம் | பூம்புகார் பிரசுரம், சென்னை | ச. சு. இளங்கோ பதிப்பு |
61 | பாண்டியன் பரிசு | 1943 | காவியம் | முல்லைப் பதிப்பகம், சென்னை | |
62 | பாரதிதாசன் ஆத்திசூடி | 1948 | கவிதை | ||
63 | பாரதிதாசன் கதைகள் | 1955 | சிறுகதை | ஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரி | சிவப்பிரகாசம் பதிப்பு. புதுவை முரசு இதழில் வெளிவந்த 14 படைப்புகளின் தொகுப்பு |
64 | பாரதிதாசனின் கடிதங்கள் | 2008 | கடிதங்கள் | ச.சு.இளங்கோ பதிப்பு | |
65 | பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி) | 1938 | கவிதை | குஞ்சிதம் குருசாமி, கடலூர் | |
66 | பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி) | 1949 | கவிதை | பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி | இ.பதிப்பு 1952 |
67 | பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி) | 1955 | கவிதை | ||
68 | பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி) | 1977 | கவிதை | பாரி நிலையம், சென்னை. | |
69 | பாரதிதாசன் நாடகங்கள் | 1959 | கவிதை | பாரி நிலையம், சென்னை | |
70 | பாரதிதாசனின் புதிய நாடகங்கள் | 1994 | நாடகங்கள் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை | ச.சு.இளங்கோ பதிப்பு |
71 | பாரதிதாசனின் புதினங்கள் | 1992 | புதினம் | ச.சு.இளங்கோ பதிப்பு | |
72 | பாரதிதாசன் பேசுகிறார் | 1981 | சொற்பொழிவு | ச.சு.இளங்கோ பதிப்பு. | |
73 | பாரதிதாசன் திருக்குறள் உரை | 1992 | உரை | பாரி நிலையம், சென்னை | ச.சு.இளங்கோ பதிப்பு |
74 | பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ் | 2012 | திரைக்கதை | பாரி நிலையம், சென்னை | ச.சு.இளங்கோ பதிப்பு. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்கள் பற்றிய ஆய்வும் பதிப்பும் |
75 | பிசிராந்தையார் | 1967 | நாடகம் | 1970ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றது. | |
76 | புகழ்மலர்கள் | 1978 | கவிதை | பூம்புகார் பிரசுரம், சென்னை | த.கோவேந்தன் பதிப்பு |
77 | புரட்சிக் கவி | 1937 | கவிதை | ஶ்ரீசாரதா பிரஸ், புதுவை | பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. |
78 | பொங்கல் வாழ்த்துக் குவியல் | 1954 | கவிதை | பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி | |
79 | மணிமேகலை வெண்பா | 1962 | கவிதை | ||
80 | மயிலம் சுப்பிரமணியர் துதியமுது | 1926 | இசைப் பாடல் | காசி-லஷ்மண் பிரசாத், வேல் நிலையம், புதுச்சேரி | |
81 | மயிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம் | 1925 | கவிதை | ஜெகநாதம் பிரஸ், புதுவை | |
82 | மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு | 1920 | இசைப்பாடல் | ஜெகநாதம் பிரஸ், புதுவை | |
83 | மானுடம் போற்று | 1984 | கட்டுரைகள் | பூம்புகார் பிரசுரம், சென்னை | ச.சு.இளங்கோ பதிப்பு |
84 | முல்லைக்காடு | 1948 | கவிதை | ஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரி | |
85 | வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? | 1980 | இலக்கணம் | பூம்புகார் பிரசுரம், சென்னை | ச.சு.இளங்கோ பதிப்பு |
86 | வேங்கையே எழுக | 1978 | கவிதை | பூம்புகார் பிரசுரம், சென்னை | த.கோவேந்தன் பதிப்பு |
திரையுலகில் பாரதிதாசன் [3][தொகு]
திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாக திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசனே ஆவார். 1937ஆம் ஆண்டில் திரைப்படத் துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் தனது இறுதிநாள் வரை அத்துறைக்கு கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத்தயாரிப்பு என பல வடிவங்களில் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டு இருந்தார்.
Comments
Post a Comment